நேரம் இப்போது சரியாக

புதன், 16 ஜூன், 2010

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல்சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகைஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing)என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

வெள்ளி, 11 ஜூன், 2010

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?


தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.



.



இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், "தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்" என்ற அமைப்பு நிறுவப்படும்.











தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகியதுறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில் பதிவு செய்ய முடியும்.



.







வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆலோசனைக்குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவர்.



.





இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி:



.





29. பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும், தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது.



.





விளக்கம்:- “வேளாண்மைப் பணி” என்றால்,-





(அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழி்ல்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்திகள், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல்;



.





(ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டியதான மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல்;



.





(இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் அளவையும் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு தீர்வழி நடவடிக்கைகளை வகுத்துரைப்பதிலும் பல்வேறு மண் தரநிலைகளுக்கும், வேளாண் தட்பவெப்ப கூறுகளுக்கும் ஏற்ற வகையில், பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதை முறைப்படுத்தி உதவி செய்வதிலும், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடு செய்தல் ஆகிய வற்றில் உயரிய தொழி்ல்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவதற்கு வேளாண்மைப்பணிமனைகளையும் ஆய்வுக்கூடங்களையும் நடத்துதல்;



என பொருள்படும்.



.





இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தம்மை இம்மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து பணியாற்றினால் அவர் முதல் முறை சிக்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டனையும் வழங்க வகை செய்கிறது மேற்கூறிய சட்டம்.



.





இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளை செய்யக்கூடாது என்று இந்த சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரிக்காமல், மேற்கூறப்பட்ட இந்தப்பணிகளை எவரேனும் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவில்லை.



.





மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





.



மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர். சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம். வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்தான் பணியாற்ற விரும்புகின்றனர். யாரும் சொந்தமாக விவசாயம் செய்யத் துணிவதில்லை. ஏனெனில் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவ்வளவு நம்பிக்கை!



.





சரி! ஏன் இந்த சட்டம்?



.





இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது.



.





இந்த ஒப்பந்தத்தின் பயனாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களோடு, இந்தியாவின் உணவு இறையாண்மைக்கு எதிரான சட்டங்களும் இந்தியாவில் அமல்படுத்தப் படுகின்றன.



.





இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பரவி வருகிறது. முன்னோடி விவசாயிகளும், சில பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



.





சொந்த நாட்டுக்குடிமகன் தொழில் தொடங்கினால் ஆயிரம் தடங்கல்களை ஏற்படுத்தும் மத்திய மாநில அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் சலுகை விலையில் நிலம், மின்சாரம், மனிதவளம் ஆகியவற்றைத் தருகின்றன. இந்த வரிசையில் இந்திய வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.



.





பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், ஆய்வு உதவித் தொகை என்ற பெயரில் வழங்கும் நிதியால் இயங்கும் வேளாண்மை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக, மிக விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுவதாக இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருதுகின்றனர்.



.





கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல: அனைத்து சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.



.





பல்லாயிரமாக ஆண்டுகளாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனுபவத்தில் வளர்த்தெடுத்த, சமூகத்தில் லாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் சட்டம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



.





தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.



.





வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.



.





இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.



.





இந்த மன்றம் வேளாண் நிலங்களை மட்டும் குறிவைக்கவில்லை. உங்கள் வீட்டுத் தொட்டத்தையும், பூச்செடிகளையும்கூட குறிவைக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் தோப்புகளையும் இந்த சட்டம் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த தோட்டங்களும், தோப்புகளும்கூட இனி இந்த மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.



.





தமிழர்களின் பாரம்பரிய அறிவுச் சொத்துகளை திட்டமிட்டு அவமானப்படுத்தி புறக்கணிக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன?



.





தமிழ்நாட்டின் வேளாண் துறையை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் வீழ்த்துவதை தவிர வேறென்ன இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்!



.





வேளாண்துறையை நெறிப்படுத்த(!) இருக்கும் இந்த அமைப்பில் ஒரு விவசாயிகூட இருக்க மாட்டார்.



.





இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு பல்வேறு தரப்பினரரும் தயாராகி வருகின்றனர்.



.





உங்களிடம் ஆதரவு கேட்டு போராட்டக்காரர்கள் வரக்கூடும். வழக்கம் போல சலிப்படையாதீர்கள்.



.





ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யமுடியாது. கம்யூட்டரின் சாப்ட்வேர் எழுதியும் தயாரிக்க முடியாது. விளைநிலங்களில் விவசாயிகளின் உழைப்பினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை விவசாயிகள் குறித்து மற்றவர்களின் அக்கறையின்மையே ஆண்டுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளியது. இந்த நிலை தொடர்ந்தால் உணவிற்காக போரிட்டு நாமும் அழிய நேரிடும்.





.







விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளித்து நன்றி செலுத்த இது தக்க தருணம். பயன்படுத்துவோம்!

மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்

மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்




மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC).மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.

மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்

மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990)மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள்(Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.

மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.

மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.

இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.

- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்

வெள்ளி, 2 அக்டோபர், 2009

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?

ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்பேரூரில் டி.இ.டிஇ. அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். பிரேசில் நாட்டில் இருந்து வந்திருந்த கிரிஸ்டி என்ற பெண்மணி முக்கிய விருந்தினர். தள்ளுப் படங்களைப் போட்டுக் காட்டி
விளக்கிக் கொண்டிருந்தார்.

பச்சைப் புரட்சியினால் உழவர்கள் நிலத்தைக் கம்பெனிகள் வாங்கிக் கொண்டுவிட்டன. உழவர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களிலேயே கூலிகளானார்கள். ஏற்றுமதிக்காக வாழைத் தோட்டம் போட்டார்கள். வாழைத் தோட்டம் போட்டபோது எலிகாப்டர் மேலே பறந்து பூச்சி கொல்லி நஞ்சைத் தெளித்தது. இதுபோன்ற போக்கால் புற்று நோய்க்கு ஆளானார்கள். தோட்டத் தொழிலை எட்டிக் கூடப் பார்க்காத மனைவி மார்களும் இத்தகைய நோய்களுக்கு ஆளானார்கள். பிறப்புறுப்புக்களிலெல்லாம் ரணக் கட்டிகள்இ பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் உறுப்புக் குறைவு. அரையும் குறையுமாகப் பாலுறுப்புக்கள். படம் போட்டுக் காட்டாது. இருந்தால் இந்தக் கொடூரத்தை நம்புவது கடினம்.

படக் காட்சி முடிவில் கேள்வி நேரம். இந்தியாவில் கூட நிறைய பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீ காட்டிய அளவு கொடுமை இல்லையே என்று கேட்டேன். அதைக் கேட்ட கிரிஸ்டி இப்படிச் சொன்னாள்.

''அதன் விளைவு இனிமேல் தான் தெரியும்'' என்றவள் காரணமும் சொன்னான். ''முதலாவதாக இந்தியர்கள் அதிகம் இறைச்சி உண்பதில்லை. இரண்டாவதாக, நீங்கள் ஐ.எம்.எப்.பிடம் அண்மையில் தான் கடன் வாங்கியுள்ளீர்கள்.

கிரிஸ்டியின் வாக்கு பலித்துள்ளதைக் காசர்கோடு படம் பிடித்துக் காட்டுகிறது. கேரளாவில் பாலக்காடு அடுத்துள்ள காசரகோடு பகுதி உலகத்தின் பார்வையைக் கவர்ந்துள்ளது. அங்கு 7000 ஏக்கர் பரப்பில் முந்திரிக் காடு உள்ளது. அது அரசுக்குச் சொந்தம். இந்தக் காட்டில் ஏரோப்ளேன் பறந்து பறந்து நச்சு தெளித்தது. மரத்துக்கு மேலே மின் கம்பி போவதால் உயரே உயரே பறந்து நஞ்சு தெளித்தது. அதன் விளைவு பயங்கரமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த 25 கிராமத்து மக்கள் தோல் புற்று நோய்க்கு ஆளானார்கள். இவர்கள் முந்திரிக் கொட்டை தின்றவர்களும் அல்ல. முந்திரிக் கொல்லையில் வேலை பார்த்தவர் ரூம் அல்ல. இவர்கள் பயன்படுத்திய ஓடை நீரிலும் மூச்சுக் காற்றிலும் நஞ்சு குடி புகுந்துவிட்டது. மக்கள் உடலெங்கும் புற்று நோய்ப் புண்கள். வயிறு வீக்கம், மூச்சிறைப்பு இப்படிப் பாதிப்புகள். பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி ஊனம். கட்டைவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே நமக்கு இயல்பான இடைவெளி உண்டல்லவா? அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரவிரலுக்கு சுட்டுவிரலுக்கும் இடையில் பிளவு காணப்படுகிறது. நடுவிரல்களையே காணோம். குழந்தைக்குத் தலை மட்டும் பெருக்கிறது. உடம்பு சிசுவின் உடலாகவே உள்ளது. இருந்து நான்கு வயது சிறுவன் நாலுவயது குழந்தை போல உடலும் மனமும் சிறுத்துக் காணப்படுகிறான். பிறக்கின்ற கன்றுக்குட்டி மூன்று காலுடன் பிறக்கிறது.

இவற்றையெல்லாம் முதலில் கண்டுகொண்டவர் ஒரு மருத்துவர். வருகின்ற நோயாளிகள் ஒரே வகை நோய்க்கு ஆளாகியுள்ளார்களே என்று புருவத்தை நெளித்த டாக்டர் இந்தக் கொடுமையை வெளிக் கொணர்ந்தார். இவர் கடைசியாகக் கண்டுபிடித்தது. பிறக்கின்ற குழந்தைக்கு சிறுநீரகங்கள் முதுகுக்கு வெளியே தொங்குகின்றன என்பதாகும். பத்து வருடமாக இவர்கள் போராடினார்கள். கோகோ, பெப்சி புகழ் (டெல்லி) சுற்றுச் சூழல் விஞ்ஞான மையம் அனைத்தையும் சோதித்து, ''முந்திரிக் காட்டில் தெளித்த என்டோசல்பான்தான் காரணம் என்று சான்று வழங்கியது. அரசு ஒரு மூன்று பேர் கமிட்டி போட்டது. கமிட்டி மக்களைப் பார்க்காமலே தீர்ப்பு எழுதியது. ''பாதிப்பு என்டோ சல்பான் தெளித்ததால் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை'' என்று எழுதினார்கள். அதற்கு மேலும் ஒரு மைய அரசு வேளாண் விஞ்ஞானி விடுத்த அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. அவர் சொன்னது இதுதான்.

''என்டோசல்பான் தெளிப்பதால்தான் பிறவி ஊனம் வர வேண்டும் என்பது இல்லை. நெருக்கமான உறவினர்கள் இடையே திருமணம் முடித்தால் கூட பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கும்'' என்று முத்துக்களை உதிர்த்தார்.

மக்கள் போராட்டம் ஓயவில்லை. நீதிமன்றம் சென்றார்கள். எலிகாப்டரில் என்டோசல் பான் தெளிப்பதை நீதிமன்றம் தடை செய்தது. எலிகாப்டரில் நஞ்சு தெளிப்பதை நிறுத்தி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முந்திரிக் காட்டில் விளைச்சல் குறையவில்லை என்று செய்தி வருகிறது. அதாவது பூச்சிகொல்லிக்கே தேவை இருக்கவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

பொருள்கள் மீது பூச்சி கொல்லி தெளிக்கும்போது அவை மீது எஞ்சிய நஞ்சு படிந்திருப்பதை 1984 ஆம் ஆண்டிலேயே கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. காய், கனி, தானியம், இறைச்சி. முட்டை, பால் இவற்றில் காணப்படும் எஞ்சிய நஞ்சு தாயின் உடலில் சேமிக்கப்பட்டு குழந்தை பெற்ற பின்பு குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலிலும் வெளிப்படுகிறது என்று கண்டறிந்தார்கள். அதனால், இயற்கை வழி பயிர்ப் பாதுகாப்புத் துறை என்று ஒரு ஆராய்ச்சித் துறையே ஏற்படுத்தப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த ஒன்றையும் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று உழவர்கள் வியப்படைகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு போப்பால் நகரில் கார்பைடு (செவின்) என்ற அமெரிக்கக் கம்பெனியின் பூச்சி கொல்லி ஆலையில் ஒரு இரவில் நச்சுக் கசிவு ஏற்பட்டது. பல்லாயிரவர் மடிந்தார்கள். பல்லாயிரவர் முடம் ஆனார்கள். அன்று சிறுவனாக இருந்த சுனில்குமார் இன்று 25 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தி இதயத்தைப் பிழிகிறது.

பூச்சி கொல்லிகள் இத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை 1962 ஆம் ஆண்டே ''ராச்சேல் கார்சன்'' புத்தகமாக எழுதி வெளியிட்டார். அமெரிக்கர்களுக்குத் தெரிந்துவிட்டது. வேப்பங்கொட்டைச் சாறே பூச்சியையும் விரட்டும், நோய் களையும் விரட்டும் என்று. அது குறித்துத்தான் 2000 ஆண்டில் மே மாதத்தில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் வழக்கு நடந்தது. இந்த அலுவலகம் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகரத்தில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்தியாவில் இருந்து போயிருந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். காப்புரிமை வாங்கியிருந்த கம்பெனியின் பெயர் டபிள்யு. ஆர்.கிரேஸ். இந்த கம்பெனி வேப்பங் கொட்டைச் சாறு பூஞ்சாள நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி அமெரிக்காவில் ஒரு காப்புரிமை வாங்கி இருந்தான். ஐரோப்பாவிலும் ஒரு காப்புரிமையும் வாங்கி இருந்தான். டெல்லி நகரில் டாக்டர வந்தனா சிவா தலைமையில் செயல்படும் விஞ்ஞான, உயிரியல் ஆராய்ச்சி மையம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வேம்பு எங்கள் சுதந்திர மரம். நினைவு தெரியாத காலத்திலிருந்து வேம்பு எங்கள் பயிர் மருத்துவத்திலும் கால்நடை மருத்துவத்திலும் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிப்பதற்கில்லை என்பது எங்கள் வாதமாக இருந்தது. நடுவர் கம்பெனிக்காரரிடம் கேட்டார். ''நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்தது என்ன? இந்தியாவில் சிறிய அளவில் செக்கில் ஆட்டுகிறார்கள். நாங்க பெரிய அளவில் ஃபேக்டரியில் தயாரிக்கிறோம்.'' இது கம்பெனியார் பதில்.

எங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேட்டார். ''A''யைக் கண்டுபிடித்தால் அது இல்லாததைக் கண்டு பிடித்ததாகும். இன்னொருவர் A,B,C,D யெல்லாம் கண்டுபிடித்த பிறகு ''E''ஐ நீ கண்டு பிடித்தால் அது எப்படிப் புதிய கண்டுபிடிப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பெனி தோற்றுப்போனது. அதன் தோல்வியை வலுப்படுத்த இன்னுமொரு சாட்சியையும் நடுவர் முன் வைத்தோம். அது டபிள்யூ. ஆர்.கிரேஸ் கம்பெனி மும்பாய் வியாபாரிக்கு எழுதிய கடிதம். அதில் ''நீங்கள் வேப்பங்கொட்டைச் சாற்றைப் பயிர்களில் தெளித்து சோதித்துப் பா¡த்திருப்பதாக அறிய வருகிறோம். உங்கள் கண்டுபிடிப்பை எங்களுக்குக் கொடுத்தால் போதிய சன்மானம் தருவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சாட்சியத்தைப் பார்த்தபோது கம்பெனிக்காரன் மூஞ்சி வெளுத்துப் போனது. மும்பாய்க்காரர் என்னதான் செய்திருந்தார்?

வேப்பங்கொட்டைச் சாற்றைக் காய்ச்சி வடித்து 35 உழவர்களின் பருத்தி, திராட்சைத் தோட்டங்களில் தெளித்திருந்தார். இரண்டு பயிர்களிலும்
பூச்சிகளும் கட்டுப்பட்டன. நோய்களும் மட்டுப்பட்டன. இந்தியாவில் எது அதிகமாக விற்கும் என்பதை யோசித்து மும்பாய் வியாபாரி பூச்சி கொல்லி தயாரிக்கக் காப்புரிமை வாங்கியுள்ளார்.

வேப்பங் கொட்டைச்சாறு பூச்சியையும் கட்டுப்படுத்தும் நோயையும் மட்டுப்படுத்தும் என்ற உண்மை பரப்பப்பட்டால் பல உழவர்களின் தற்கொலை தவிர்க்கப்படும். ஆந்திராவில் ஆயிரம் ஆயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். காரணம் பருத்திக் காயைத் தின்ற புழுக்களை இரசாயணப் பூச்சி கொல்லிகளால் கொல்ல முடியவில்லை. ஆந்திராவில் உழவர் தற்கொலையை ஒட்டி தமிழகத்து உழவியல் விஞ்ஞானி திரு.செல்வம் மற்றும் இரு விஞ்ஞானிகளை இணைத்துக் கொண்டு ''பருத்தி உழவர்களின் நண்பர்கள்'' என்ற நூலை வெளியிட்டார். அதில் எந்த எந்தப் பூச்சிகளை எந்த எந்த பூச்சிகள் உண்ணுகின்றன என்பது வண்ண வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு உழவுத்துறை இயக்குனர், ஆந்திர மாநில உழவுத் துறை இயக்குனர் இருவரும் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் அணிந்துரை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள செய்தி முக்கியமானது.

''ஒரு பருத்தி வயலில் 150 உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பத்து மட்டுமே செடியைத் தின்கின்றன. 100 உயிரினம் செடியைத் தின்னும் பூச்சிகளைத் தின்கின்றன. மீதமுள்ள நாற்பது உயிரினங்கள் நன்மையும் செய்வது இல்லை. தீமையும் செய்வது இல்லை. இரசாயணத்தைத் தெளித்துத்தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம் பற்றிய அறிவில்லாதவர்கள். அல்லது வேறு ஏதோ காரணத்தால் அப்படிச் சொல்லுகிறார்கள்'' இப்படி எழுதி வெளியிட்டார்கள். நமது விஞ்ஞானிகளுக்கு இந்தப் புத்தகத்தில் ஆளுக்கொன்று கொடுத்தால் நமது உண்ணும் உணவும் குடிநீரும் நஞ்சாகாமல் காக்கப்படும்.

பத்தொன்பது ஆண்டுகளாக நான் முட்டைகோசு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தேன். அக்டோபர் கடைசி வாரம் நீலகிரி சென்றபோது மீண்டும் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. முட்டைக்கோசு உண்பதை விலக்கியதற்கான அடிப்படைக் காரணம். அது 1987 ஆம் ஆண்டு. நான்கு வார இயற்கை உழவாண்மை பயிற்சி முடித்திருந்த நேரம். பெங்களூர் போயிருந்தேன். அங்கு முட்டை கோசு அறுவடை நடைபெறுவதைப் பார்த்தேன். ஒரு பெரிய அண்டா அல்லது கொப்பரையில் என்ட்ரின், எக்கலாச்சு முதலாக என்டோசல்பான் ஈறாக பத்து வகை பூச்சி. பூசனைக் கொல்லிகளைக் கொட்டிக் கலக்குகிறார்கள். பிறகு, முட்டை கோசு, காலி ப்ளவர், பீட்ரூட், கேரட் அனைத்தையும் தயாரிக்கப்பட்டுள்ள நஞ்சுக் கலவையில் முக்கி எடுக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை நோக்கி நான் கேட்டேன். ''இந்த நஞ்சு அனைத்தும் பூச்சி, பூஞ்சனத்தைக் கொல்வதற்கு என்றுதானே சொன்னார்கள். ஏன் அறுவடை செய்தபிறகு முக்குகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் பதில் விசித்திரமானது.

''அறுவடையாகும் காய்கறிகள் உடனடியாக விற்கப்படுவது இல்லை. பல இடங்களுக்கும் போய் வாடிக்கையாளரை சந்திக்கும் போது ஐந்து நாள் கடந்திருக்கும். அதற்குள் காய்கறி வதங்கி வாடிப்போனால் விற்காமல் கடந்து போகும். அதற்காகத்தான் பூச்சி கொல்லியில் முக்கி எடுக்கிறோம்.''

மேட்டூர் இலக்கியக் கழகத்தில் இதுகுறித்துப் பேசியபோது ஒரு இளைஞர் எழுந்து, ''ஐயா நான் நீலகிரியில் இருந்து வருகிறேன். நாங்கள் முட்டை கோசை நஞ்சு கலந்த நீரில் முக்கி எடுப்பது இல்லை'' என்றார். ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். போகும் இடமெல்லாம் அதைச் சொல்கிறேன்'' என்றேன். அந்த இளைஞர் வாய்திறக்கவில்லை. நீலகிரி போனபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் சக்தி மிகுந்த பூச்சி கொல்லியை சக்தி மிகுந்த தெளிப்பானில் இட்டு வாரம் ஒரு முறை முட்டைகோசு, காலிஃப்ளவர் செடிகளைக் குளிப்பாட்டுகிறார்கள்.

இன்று ஒரு மாற்றம். வான்யா ஓர் என்று பெயர் சூடிய ஓர் சேவகி தனது நண்பர்களுடன் கூட ''எர்த் ட்ரஸ்ட்'' என்று ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு சார்ந்த நண்பர்கள் ''உயிரகற்றல் வேளாண்மை''யில் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள், ஆடவர், மகளிர் அனைவரும் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்கிறார்கள். அவை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கடைக்குக் கூட வருகின்றன. ''உங்கள் காய்கறி வாடுவது இல்லையா'' என்று கேட்டேன். ''நாங்கள் யூரியா, டீ.ஏ.பீ என்று உப்பு எதுவும் போடுவது இல்லை'' என்றார்கள்.
 



நன்றி: திரு. நம்மாழ்வார்